செய்திகள்

தோல்வி பயத்தால் 3 எம்.எல்.ஏ.க்களை நீக்க அரசு முயற்சிக்கிறது- வைகோ குற்றச்சாட்டு

தோல்வி பயத்தால் 3 எம்.எல்.ஏ.க்களை நீக்க அரசு முயற்சிக்கிறது என்று ம.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மே தின விழாவில் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #vaiko #3mlas #tngovt

மாலை மலர்

சென்னை:

ம.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மே தின விழாவில் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்றைய ஆட்சியில் தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். தொழிலாளர் உரிமைகள் பறிபோகிறது. கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசாக நரேந்திர மோடி அரசு உருவாக்கி விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

தமிழகத்தில் அடுத்து தொழிலாளர் நலன் காக்கும் அரசாக பாட்டாளி வர்க்கத்தை பாதுகாக்கும் அரசாக தி.மு.க. தலைமையிலான அரசு அமைய வேண்டும். என்ற உணர்வோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செயல் படுகிறது.

சட்டமன்ற இடைத் தேர்தலில் 22 தொகுதிகளிலும் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற நிலையில் ஆளும் கட்சி தன்னுடைய அரசை பாதுகாக்க கருத்துரிமையை நசுக்கும் விதத்தில் இந்த கட்டத்தில் 3 சட்ட மன்ற உறுப்பினர்களை நீக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவோம் என அறிவித்திருக்கிறார்.

ஓட்டப்பிடாரம் திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி சூலூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது இந்த இடைத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

வருகிற மே 8, 9-ந் தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், பத்தாம் தேதி ஓட்டபிடாரம் தொகுதியில், அதன் பின்னர் சூலூரில் 11-ந் தேதி, 12, 13-ந் தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் நான் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன்.

தேவைப்பட்டால் ஓட்டப் பிடாரத்தில் இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொள்வேன்.

பொன்பரப்பியில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் முத்தரசன் எந்த சமூகத்தைப் பற்றியும் பேச வில்லை.

எந்த தலைவரைப் பற்றியும் தவறான கருத்தைப் பேசவில்லை. அவர்மீது துண்டு பிரசுரத்தை ஆத்திரத்தை தூண்டும் விதத்தில் வெளியிடப்படுகிறது.

பா.ம.க. அவர் மீது அவதூறும் அச்சுறுத்தலும் விடுக்கிறது. பா.ம.க. தலைவர் ராமதாஸ் இந்த செயல் வளரவிடாமல் தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பொது அமைதியும் சமூக நல்லிணக்கமும் அமையும் விதத்தில் செயல்பட பாமக தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.