வைகோ 
செய்திகள்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு - வைகோ கண்டனம்

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில், உலகப் பொதுமறை தந்தவரும், மனித குலத்துக்கே வழிகாட்டக்கூடிய ஒளிச்சுடரை வழங்கியவருமான திருவள்ளுவர் சிலை மீது சாணத்தைக் கொட்டி இருக்கின்றார்கள்.

முக்கடல் சங்கமத்தில் விண்முட்டும் திருவள்ளுவர் சிலை எழுப்பினார் டாக்டர் கலைஞர் அவர்கள். இது உலகின் பல நாடுகளில், பல மொழி பேசுவோர் திருவள்ளுவர் சிலை எழுப்பி தங்களை வாழ வழிகாட்டும் அறநெறி மாண்பாளராகப் போற்றுகின்றனர். இக்கொடியோர் செயலால் தமிழகம் வெட்கித் தலைகுனிகின்றது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை என்றார் வள்ளுவர். தன்னை வெட்டிக்குழி பறிப்பவனையும் தாங்கி நிற்கின்றது நிலம் என்றார்.

அதுபோல இகழ்ச்சியையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். எனினும் மன்னிக்க முடியாத இம்மாபாதகச் செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT