மதுரையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோயும், தொற்றுநோயும் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றம் மூலம் ஆலையை திறக்க அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. எனவே தமிழக அரசு மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலை மூடப்பட்டால் முழுமையான பலன் இருக்கும்.
துப்பாக்கி சூடு குறித்து ஹென்றி டிபேன் தலைமையிலும், மனித உரிமைகள் கழகம் சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ ஆகியோர் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சாதாரண மக்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் சதியாக உள்ளது. தமிழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்கி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு மே மாதம் மத்திய அரசின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மோடி ஆட்சிக்கு வரமுடியாது. அதற்குள் மக்களுக்கு என்னென்ன கெடுதல்களை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #SterlitePlant