வைகைச்செல்வன் 
செய்திகள்

விஜய் படம் ஓடுவதற்கு அரசியல் பேசுகிறார்- வைகைச்செல்வன்

நடிகர் விஜய் தனது படங்களை பரபரப்பு அரசியலுக்கு உள்ளாக்குவதற்காக பேசுவதாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.

மாலை மலர்

நடிகர் விஜய் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசியது குறித்து அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியதாவது:-

தற்போது திரைப்படங்கள் எல்லாம், 10 நாட்கள், 20 நாட்களுக்கு மேல் ஓடுவது மிகவும் சிரமமாக உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திரைப்படங்களை பரபரப்புக்கு உள்ளாக்குவதும் அதே சமயத்தில் திரைப்படத்தின் தலைப்பை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும், ஒரு பரபரப்பு அரசியல் தேவைப்படுகிறது. திரைப்படத்துறையிலும் இது தொற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் கதையை நம்பி படம் எடுத்தார்கள். அந்த கதையின் கட்டமைப்பு காரணமாக நீண்ட காலம் ஓடக்கூடிய அளவுக்கு சற்றேறக் கூடிய 1 ஆண்டு காலம் கூட ஓடிய திரைப்படங்கள் உள்ளன.

தற்போது கதையே இல்லாத திரைப்படத்தை எடுத்து விட்டு அதை எப்படியாவது 1 மாதம், 2 மாத காலத்துக்கு ஓட்டிவிட வேண்டும் என்பதற்காக பரபரப்புக்காக இது போன்ற திரைப்பட வெளியீட்டு விழாக்களில், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பரபரப்பான அரசியலை பேசி அதன் மூலம் தன்னுடைய திரைப்படம் ஓடுவதற்காக ஒரு அரசியலை செய்து வருகிறார்கள்.

அவற்றில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் நடிகர் விஜய்யும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அவரது திரைப்படங்களும் அப்படித்தான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

அதைப் போல யாரை எங்கே வைக்க வேண்டும். அங்கே வைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கேதான் தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதில் எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை.

உள்ளபடியே அ.தி. மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் இடைத்தேர்தலில் 9 அ.தி.மு.க. உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியை நிலைத்திருக்க செய்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சி 2 முறை தொடர்ந்து நடந்து வருகிறது. 10 வருட காலத்திற்கு எங்கள் ஆட்சிதான் நடைபெறுகிறது. நடிகர் விஜய் தனது படங்களை பரபரப்பு அரசியலுக்கு உள்ளாக்குவதற்காக ஒரு ஒத்திகையை இதுபோன்ற விழாக்களில் பேசி வருகிறார் என்பதுதான் உண்மை.