சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, கண்ணணூர், சிறுவாட்டுக்காடு, பெத்தேல் புரம், கோட்டைவெளி மற்றும் புலிக்குத்திக்காடு உள்பட 14 மலைகிராமங்களில் விவசாயத்துடன் புளியமரங்கள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். புளி சீசன் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் அதிகமாக இருக்கும். வடகாடு மலைப்பகுதியில் விளையும் புளி இயற்கையாக எவ்வித செயற்கை உரங்களும் இல்லாமல் அறுவடை செய்யப்படுவதால் மிகவும் சுவையாகவும், உடல்நலத்திற்கு கெடுதல் ஏற்படாத வண்ணமும் இருப்பதால் மலைப்பகுதிகளில் அறுவடை செய்யும் புளியை ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த வருடம் கொட்டையுடன் கூடிய புளி 10 கிலோ ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதே விலை கிடைக்கும் எனவும், பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏராளமான புளியமரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றியதன் காரணமாக நகர் பகுதிகளில் புளி விளைச்சல் குறைந்துள்ளதாகவும் வடகாடு மலைப்பகுதியில் விளையும் புளிகளுக்கு கிராக்கி இருக்கும் என மலைப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.