செய்திகள்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உயிருக்கு மிரட்டல் - உளவுத்துறை எச்சரிக்கை

உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #YogiAdityanath

மாலை மலர்

லக்னோ:

இந்தியாவில் முக்கிய தலைவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு உளவுத்துறையினர் கண்டுபிடித்து எச்சரித்தனர்.

ஆனால் பயங்கரவாதிகள் எந்தெந்த தலைவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளனர் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதை சமீபத்தில் மத்திய பிரதேச மாநில போலீசார் கண்டுபிடித்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் சிக்கிய ஒரு நபர் மூலம் இது தெரிய வந்துள்ளது.

வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று லக்னோவில் நடக்கும் விழாவில் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். அந்த சமயத்தில் அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில போலீசார், இந்த தகவலை உத்தரபிரதேச மாநில போலீசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு உடனடியாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று யோகி ஆதித்யநாத் தேசியக் கொடி ஏற்ற வரும்போது அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரை குண்டு துள்ளக்காத காரில் விழாவுக்கு அழைத்து வர பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். #YogiAdityanath