செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மணல் கடத்திய 10 லாரிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை அருகே சவுடு மணல் கடத்தியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் நேற்று இரவு 9 மணி அளவில் தொம்பரம்பேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது ஒன்றின் பின் ஒன்றாக 10 லாரிகள் வேகமாக நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த சந்திரதாசன் ஜீப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தி சென்று அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்.

லாரிகளில் சவுடு மணல் இருந்தது. இதற்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து சவுடு மணல் கடத்தியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்காக முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தடம் அமைக்க சவுடு மணல் எடுத்து செல்வதாக விசாரணையில் தெரியவந்தது.

எனினும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் சவுடு மணல் கடத்தியதால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தெரிவித்தார்.

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வெங்கல் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாமரைப்பாக்கம் ஏரியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அமணம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்களான வெங்கடேசன், தமிழரசன், விவேக் ஆகியோரை கைது செய்தனர். #Tamilnews