ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கிருஷ்ணா நதி கால்வாயில் தேங்கி நிற்கும் மழை நீரில் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர்.
அப்போது தூண்டிலில் ஏதோ ஒரு பொருள் சிக்கி கொண்டது. பெரிய மீனாக இருக்கும் என்ற ஆசையில் வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அந்த பொருளை வெளியே இழுத்தனர். அப்போது அது பழமையான செம்பினால் ஆன அம்மன் சிலை என்பது தெரிந்தது.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமனோகரன் ஆகியோர் விரைந்து வந்து சிலையை மீட்டனர். இந்த சிலை சுமார் 2 அடி உயரம் இருந்தது. சிலையின் கைகள் சேதம் அடைந்து இருந்தன.
மிகவும் பழமையான இந்த சிலை கிருஷ்ணா கால்வாயில் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சென்னையில் உள்ள தொல் பொருள் ஆராய்ச்சி கழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.