செய்திகள்

காதல் திருமணம் செய்த பேராசிரியர் திடீர் தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (26). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பெண் திலகாவை 4 ஆண்டுகளாக காதலித்தார். பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் கடந்த 13-ந்தேதி திருப்பதி கோவிலில் நடைபெற்றது.

மறுநாள் 14-ந் தேதி பெரிய பாளையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் சந்திர குமார் வயல்வெளிக்கு சென்றார். அங்கு திடீரென அவர் வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் நேற்று மாலை சந்திரகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.