செய்திகள்

உத்தமபாளையம் தாலுகாவில் இறந்தவர்கள் பெயரில் பொருள் வாங்கிய 106 ரேசன் கார்டுகள் ரத்து

உத்தமபாளையம் தாலுகாவில் இறந்தவர்கள் பெயரில் பொருட்கள் வாங்கிய 106 ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது.

மாலை மலர்

உத்தமபாளையம்:

ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிகளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

அதிகாரிகள் சோதனையிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. தேனி மாவடத்தில் உத்தமபாளையம் 1,40,000 ரேசன் கார்டுகள் உள்ள பெரிய தாலுகாவாகும். இங்கு சுமார் 18 ஆயிரம் ஒரு நபர் ரேசன் கார்டுகள் உள்ளன.

அதிகாரிகள் ரேசன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் 106 பேர் இறந்த பின்பும் அவர்கள் பெயரில் ரேசன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அந்த கார்டுகளை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

மேலும் கூட்டு குடும்பத்தில் இருந்து கொண்டு தனிநபர் கார்டு பயன் படுத்துவோர் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பெயரை குடும்பத்தில் உள்ள ரேசன் கார்டுகளுடன் சேர்த்து விட சிவில் சப்ளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.