செய்திகள்

ஜமைக்கா: 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மின்னல் வீரர் உசைன் போல்ட் அபார வெற்றி

மின்னல் வேக வீரரான உசைன் போல்ட் தனது தாய்நாடான ஜமைக்காவில் நடைபெற்ற 100 மீட்டர் கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மாலை மலர்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட்(30), இதுவரை 8 ஒலிம்பிக் பதக்கங்களையும், 13 முறை உலக சாம்பியன் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

உலகின் மிக வேகமான ஓட்டப் பந்தய வீரர் என்ற சிறப்பிடத்தையும் பெற்றுள்ள இவர், ஜமைக்கா தலைநகரான கிங்ஸ்ட்டன் நகரில் நேற்று நடைபெற்ற 100 மீட்டர் கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் பங்கேற்றார்.

ஐந்தாம் எண் கொண்ட ஓடுபாதையில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கிய உசைன் போல்ட், ஆரம்பத்தில் சற்று தளர்வாக ஓடினார். பாதி தூரத்தை கடந்த பின்னர், தனது வழக்கமான மின்னல்வேக ஓட்டத்தால் அரங்கத்தில் இருந்த சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்களை அசத்தினார்.

உள்நாட்டு மண்ணில் உசைன் போல்ட் கலந்துகொள்ளும் கடைசி ஓட்டப் பந்தயமான இந்தப் போட்டியை சர்வதேச தடகளப் போட்டிகளின் தலைமை சங்கத் தலைவர் செபாஸ்டியன் கோ மற்றும் ஜமைக்கா நாட்டின் பிரதமர் ஆண்ட்ரு ஹோல்னெஸ் ஆகியோர் நேரில் கண்டு களித்தனர்.

10.03 வினாடிகளில் எல்லைக்கோட்டை கடந்த உசேன் போல்ட் இந்தப் போட்டியில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.