சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில் வைத்து கடந்த மாதம் 2-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். சவுதியின் மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்த அவரது படுகொலை, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படுகொலை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின்பேரில்தான் நடந்துள்ளது என அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. கூறியது.
நேற்று முன்தினம் இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். அப்போது கசோக்கி படுகொலையை இளவரசர் முகமது பின் சல்மான் நன்றாக அறிந்திருப்பார் என ஒப்புக்கொண்டார். ஆனால் தொடர்ந்து கூறும்போது, “ அவர் இதை செய்திருக்கலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் அவர் கூறும்போது, “கசோக்கி படுகொலையில் சி.ஐ.ஏ. 100 சதவீதம் உறுதியாக கூறவில்லை” என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வெளியுறவுத்துறை கமிட்டி, டிரம்புக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.