செய்திகள்

இந்தியாவுடன் ராணுவ உறவுகளை பலப்படுத்தும் மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்

இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக 71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்ற மேல்சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்க அரசு கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது. இந்நிலையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை அங்கீகார மசோதாவுக்கு(2019) ஒப்புதல் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது.

விரைவில் பாராளுமன்ற காங்கிரஸ் சபையிலும் இரு சபைகளின் கூட்டுக் குழுவிலும் ஒப்புதல் பெற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் சட்டவடிவம் பெறும் இந்த மசோதாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படை நிதியாக 520 கோடி டாலர்களும், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் செலவினங்களுக்காக 35 கோடி டாலர்களும், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசுக்கு எதிரான படைகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்க 30 கோடி டாலர்களும் ஒதுக்க இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.