செய்திகள்

பிலிப்பைன்ஸ் கடலில் அமெரிக்க போர் விமானம் விழுந்த விபத்தில் 3 பேர் பலி

11 பேருடன் சென்ற அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ராணுவ விமானம் நிலை தடுமாறி பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

தீவு கூட்டமான பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதி வழியாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஒரு ராணுவ விமானம் கடந்த 22-ம் தேதி பறந்து கொண்டிருந்தது. வழக்கமான பயிற்சிக்கு பின்னர் அங்குள்ள அமெரிக்க கடற்படையின் ரொனால்ட் ரீகன் போர் கப்பலில் தரை இறங்குவதற்காக சென்ற அந்த விமானம் நிலை தடுமாறி ஒக்கினாவா தீவின் தென்கிழக்கே கடலில் விழுந்தது.

இவ்விபத்து பற்றி அறிய வந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் ஆயிரம் கடல் மைல் பரப்பளவில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 11 பேரை தேடும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

காணாமல் போன மூன்று பேரை கடந்த 48 மணி நேரமாக தேடிவந்த மீட்புக் குழுவினர், அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இன்று தேடுதல் பணியை கைவிட்டனர்.