செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து தப்பிச்செல்ல திட்டமிட்ட அமெரிக்க தூதரக அதிகாரியின் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானில் காரால் மோதி ஒரு வாலிபரின் மரணத்துக்கு காரணமான அமெரிக்க தூதரக அதிகாரி விமானம் மூலம் இன்று தாய்நாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்றதை அதிகாரிகள் முறியடித்தனர். #USDiplomat #bidtoflyoutofPakistan

இஸ்லாமாபாத்:

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். கடந்த சில மாதம் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் இம்மானுவேல் ஹால் சென்ற கார் மோதியதில் அதீக் பெய்க் என்னும் 22 வயது வாலிபர் பலியானார்.

ஜோசப் குடித்து விட்டு வாகனம் ஓட்டி, சிகப்பு விளக்கு சிக்னலை கடந்து சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. தூதரக அதிகாரி என்பதால் அவரை கைது செய்ய முடியாது. எனினும், சர்வதேச விதிமுறைகளின் படி அவர் மீதான விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜோசப் இம்மானுவேல் ஹால் யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக, ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்ராம் பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு விமானம் நேற்று காலை சுமார் 11.15 மணியளவில் இஸ்லாம்பாத் நகரில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

சற்று நேரத்துக்குள் ஜோசப் இம்மானுவேல் ஹால் உள்ளிட்ட சுமார் பத்துபேர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ஜோசப் இம்மானுவேல் ஹால் வந்திருப்பதை அறிந்த பாகிஸ்தான் உளவுப்படை அதிகாரி அவரை விமானத்தில் ஏற அனுமதிக்காமல் தடுத்தி நிறுத்தினார்.

இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை அந்த அதிகாரி பறிமுதல் செய்ததுடன் மேலிடத்துக்கும் தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு தனது திட்டம் நிறைவேறாமல் அவர் ஏமாற்றத்துடன் அமெரிக்க தூதரகத்துக்கு திரும்பினார்.

மாலைவரை காத்திருந்த அமெரிக்க விமானப்படை விமானம் சுமார் 4 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை சென்றடைந்தது. #USDiplomat #bidtoflyoutofPakistan 

SCROLL FOR NEXT