டெல்லி அருகே உள்ள குர்கானைச் சேர்ந்தவர் ஏ.கே.ராகவ். முன்னாள் நீதிபதியான இவரது வீட்டின் அருகே மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை மின் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக வயர்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பணி காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்டநேரம் பவர் கட் ஆனதால் ஆத்திரம் அடைந்த முன்னாள் நீதிபதி ராகவ், வெளியே வந்து மின்வாரிய ஊழியர்களை கண்டித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மேலும் கோபம் அடைந்த ராகவ், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டியுள்ளார். பின்னர் ஊழியர்களை நோக்கியும் சுட்டுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து சிவில் லைன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஊழியர்களை கொலை செய்ய முயன்றதாக ராகவ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.