திருப்பூர்:
திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான விளக்கக்கூட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறையின் மானியக் கோரிக்கையின்போது திருமுருகன்பூண்டி பேரூராட்சியினை நகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே பழங்கரை ஊராட்சியை திருமுருகன்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பான விளக்கக் கூட்டம் திருமுருகன் பூண்டி காமாட்சியம்மன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் வருகிற 5-ந் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்துவது தொடர்பான விளக்கக் கூட்டமும் 5-ந் தேதி பிற்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.