செய்திகள்

உ.பி.யில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை சார்ந்த விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 28 ஆக உயர்ந்துள்ளது. #UPRains ##UPRainstoll28

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 19 பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக, மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அவுரைய்யா மற்றும் அமேதி மாவட்டங்களில் தலா இருவரும், லக்கிம்புரி கிரி, ரேபரேலி மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பருக்காபாத் மாவட்டத்தில் 3 பேரும், பாரபங்கி மாவட்டத்தில் 2 பேரும், பைசாபாத் மாவட்டத்தில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால், கடந்த இரு நாட்களில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 28 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லக்னோ, ரேபரேலி, பிரதாப்கர், பைஸாபாத், பாரபங்கி, மனிப்புரி, பல்ராம்பூர், பிலிபிட், பரேலி, ஷாஜஹான்பூர், புடவுன், பருக்காபாத், ஜலாவ்ன், மீரட், முசாபர்நகர், ஷாம்லி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. #UPRains ##UPRainstoll28

SCROLL FOR NEXT