மாயாவதி 
செய்திகள்

ஐதராபாத் போலீஸ் போன்று உ.பி. போலீஸ் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் -மாயாவதி

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விஷயத்தில், ஐதராபாத் போலீஸ் போன்று உ.பி. போலீஸ் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என மாயாவதி கூறியுள்ளார்.

லக்னோ:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் இன்று அதிகாலை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்தின் அருகிலேயே, இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்று பாராட்டி உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கூறியதாவது:-

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. ஆனால், மாநில அரசு தூங்குகிறது. இந்த விஷயத்தில் உ.பி. காவல்துறையும், டெல்லி காவல்துறையும் ஐதராபாத் போலீஸ் போன்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கே குற்றவாளிகள் அரசு விருந்தினர்கள் போன்று நடத்தப்படுகிறார்கள். இப்போது உ.பி.யில் காட்டு தர்பார் நடக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

என்கவுண்டர் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். என்கவுண்டர் பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் அந்த இடத்தில் திரண்டனர். அவர்களில் சிலர் போலீஸ் அதிகாரிகளை பாராட்டி முழக்கங்கள் எழுப்பினர். பாலத்தின் மீது திரண்டிருந்த பொதுமக்கள், கீழே நின்றிருந்த போலீசார் மீது ரோஜா இதழ்களை தூவி அவர்களை வாழ்த்தினர். 

SCROLL FOR NEXT