அயோத்தி:
வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை வருகிற 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு மாநில அரசு சார்பில் ‘தீபோத்சவா’ என்னும் பெயரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமை தாங்குகிறார். மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம், கலாசார மந்திரி மகேஷ் சர்மா, உத்தரபிரதேச மாநில மந்திரிகள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக 1 லட்சத்து 71 ஆயிரம் அகல்விளக்குகள் சரயு நதிக்கரையில் ஏற்றப்படுகிறது. ராமாயணத்தில் கூறப்படும் புஷ்பக விமானம் போல அங்கு ஒரு ஹெலிகாப்டரும் அலங்கரித்து நிறுத்திவைக்கப்படுகிறது. மேலும் ராமாயணம் தொடர்பான 22 நிமிட லேசர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
சரயு நதி பகுதியில் கவர்னர் ராம்நாயக், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருவரும் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.