செய்திகள்

உ.பி.: குடியரசு தினவிழாவில் கல்வி மந்திரியின் உளறல் பேச்சால் சலசலப்பு

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநில கல்வி மந்திரி பேசுகையில், 59-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார்.

மாலை மலர்

லக்னோ:

உத்திரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள ராஜ்பவனில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக், அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக, யோகி ஆதித்யாநாத் அமைச்சரவையில் கல்வி மந்திரி சந்தீப்சிங் உரையாற்ற எழுந்தார். மைக்கை பிடித்த அவர், நமது இந்திய நாடு 59-வது குடியரசு தினவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது என பேச ஆரம்பித்தார்.

அவரது பேச்சை கேட்டதும் கூட்டத்தினரிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்திய நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டு தற்போது 69-வது ஆண்டை கொண்டாடி வருகிறது. ஆனால் இந்த தகவலை கூட உணராமல் சந்தீப் சிங் 59-வது ஆண்டு என தவறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு மாநிலத்தின் கல்வி மந்திரிக்கு நமது நாடு எத்தனையாவது குடியரசு தினம் கொண்டாடுகிறது என்ற விவரம் கூட தெரியவில்லையே என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.