செய்திகள்

காஷ்மீர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உ.பி.யை சேர்ந்தவர் பலி

தெற்கு காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உ.பி.யை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உ.பி.யை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியின் பிஜ்பெஹரா பகுதியில் உள்ள அர்வானியில் சாலையோர உணவு கடை நடத்தி வருபவர் ஷகீர் (35). உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 9 ஆண்டுகளாக அப்பகுதியில் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஷகீர் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவரது மார்பு மற்றும் கால்களில் குண்டுகள் பாய்ந்தன.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஷகீர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தீவிரவாதிகளாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.