செய்திகள்

ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவர்

மனைவியின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் கணவர் தோளில் சுமந்து சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். #UPMan #WifeDead #BadaunHospital

மாலை மலர்

பட்வான்:

உத்தரபிரதேச மாநிலம் பட்வான் மாவட்டத்தை சேர்ந்த சாதிக் என்பவரது மனைவி முனிஷா (வயது 30) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதனையடுத்து உடலை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் அனுமதிக்குமாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் சாதிக் கடிதம் கொடுத்தார்.

ஆனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. உடனே தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி சாதிக் வீட்டிற்கு நடந்து சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடலை எடுத்துச்செல்ல வேன் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். ஆனால் சாதிக் கொடுத்த கடிதத்தை பரிசீலித்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதற்குள் அவர் தனது மனைவியின் உடலுடன் சென்று விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.  #UPMan #WifeDead #BadaunHospital