உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி, விசாரணை நடந்து வருகிறது. புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரம், குற்றம் சாட்டப்பட்ட சின்மயானந்தாவிடம் 7 மணிநேரம் என தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் தந்தை சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவினரிடம் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்களை ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக புகார் அளித்த மாணவியின் தோழி கூறுகையில், ‘அவள் என்னுடன்தான் படிக்கிறாள். என்னிடம் சின்மயானந்தாவின் பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் அவளுக்கு இலவச உணவு, சில சலுகைகள் விடுதியில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான காரணம் தாமதமாகத்தான் அவளுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர்தான் அவள் குளித்த வீடியோவினை வைத்து மிரட்டுவதாக கூறினாள்’ என கூறியுள்ளார்.