செய்திகள்

ஒழுங்காக கடமையாற்றாத போலீசாருக்கு 50 வயதில் கல்தா

ஒழுங்காக கடமையாற்றி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறும் போலீசாரை கட்டாய பணி ஓய்வில் 50வது வயதில் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை உத்தரபிரதேசம் மாநில அரசு நிறைவேற்ற உள்ளது.

மாலை மலர்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  அம்மாநில போலீசார் ஒழுங்கான முறையில் கடமை ஆற்றுகின்றார்களா? சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்றனரா? என்பதை அறிய அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி கடந்த மார்ச் 31ம் தேதி வரை 50 வயது முடிந்த டிஜி, ஐஜி, டிஐஜி, எஸ்பி மற்றும் மற்ற பொறுப்புகளில் உள்ள காவலர்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்காதவர்கள் அடங்கிய பட்டியலை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏடிஜி பியூஷ் ஆனந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை கடந்த 21ம் தேதி காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 56வது விதியின்படி , ‘50 வயதை கடந்த பணியில் ஒழுங்கில்லாத போலீசாருக்கு பணி ஓய்வினை அரசாங்கமே  வழங்கலாம்’ என்ற கூற்று உள்ளது.

இதன் அடிப்படையிலேயே இந்த சுற்றறிக்கை அரசு சார்பில் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.