செய்திகள்

மதுவிலக்கை அமல்படுத்த முடியாது - உத்தரபிரதேசம் அரசு திட்டவட்டம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தரமான மது விற்கப்படும் என சட்டசபையில் மந்திரி இன்று தெரிவித்தார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition

லக்னோ:

உத்தரபிரதேசம் மாநில சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் முஹம்மது பயீம் இர்பான் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. அமான் மானி திரிபாதி ஆகியோர் மதுவிலக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் பதில் அளித்தார்.

மதுவிலக்கு என்பது இந்த மாநில அரசின் கொள்கை. ஆனால், மாநில அரசின் வருமானத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள், பீர் அல்லது நாட்டு மது வகைகளின் விற்பனையை தடை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.

அப்படி மது விற்பனையை தடை செய்து மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளத்தனமான மது விற்பனை பெருகிவிடும். இதனால் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடும். மது வகைகளின் மீதான ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருமானம் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, வாடிக்கையாளர்களுக்கு தரமான மதுவை விற்பதில் மாநில அரசு அக்கறை செலுத்தும் என்று ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் குறிப்பிட்டார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition