லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து கோரக்பூர் தொகுதி எம்.பி. யாக இருந்த மடாதிபதி யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
அவர் எம்.எல்.ஏ.வாக இல்லாததால் உத்தரப் பிரதேச மாநில மேல்-சபையில் காலியாக உள்ள இடத்தில் போட்டியிட்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
தற்போது 5 மேல்-சபை இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், துணை முதல்- மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, மந்திரிகள் ஸ்வதந்திர தேவ் சிங், மோஷின் ராஸா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில் சொத்து விவரங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு 32 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
2014 பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்ட போது தனது சொத்து மதிப்பு ரூ.72.94 லட்சம் என குறிப்பிட்டு இருந்தார். இப்போது வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ. 96 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 32 சதவிகிதம் (ரூ.23.80 லட்சம்) உயர்ந்துள்ளது. இதில் 20 கிராம் தங்க காதணி, 10 கிராம் தங்க சங்கிலி ஆகியவை அடங்கும். அரசு அளிக்கும் சம்பளத்தை தொடர்ந்து தனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.