செய்திகள்

உத்தரப்பிரதேசம்: அகிலேஷின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது: - பா.ஜ.க.

உத்தரப்பிரதேசம் மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அரசு மீது சமாஜ்வாடி கட்சியினர் அபாண்டமாக குற்றம் சாட்டி வருகின்றனர் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் 

அறிவித்துள்ளது. அதன்படி, இன்று இரண்டாவது கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் 

தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், உள்ளாட்சி தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் அரசு அமைப்புகளை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார். பா.ஜ.க.வினரின் ஏஜெண்ட்களாக மாநில தேர்தல் ஆணையமும், அரசு அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு உ.பி. பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்திரநாத் பாண்டே கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வினர் விதிகளுக்கு உடபட்டு தான் செயல்பட்டு வருகின்றனர். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது மற்றும் தவறானது.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளின்படியே முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் இரு கட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.