பஹ்ரைச்:
உத்தரபிரதேசத்தில் நேற்றிரவு புனித யாத்திரை மேற்கொள்ளும் நைமிஷரண்யா பகுதியில் இருந்து ஜீப் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. ஜர்வால் சாலை வழியே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த ஜீப், சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த டிராக்டர் டிராலியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இவ்விபத்தில் ஜீப்பில் பயணம் செய்தவர்களில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த துயர சம்பவத்திற்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். #UPAccident