செய்திகள்

கத்துவா, உனாவ் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் உண்ணாவிரத போராட்டம்

கத்துவா மற்றும் உனாவ் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கினார். #Unnaorapecase #Kathuarapecase #DCWchief #indefinitehungerstrike

மாலை மலர்

புதுடெல்லி:

கத்வா மற்றும் உனாவ் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்ககோரி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் இன்று தொடங்கியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் முன்னர் பேசிய அவர், நான் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளேன். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும், அதற்கு மத்திய அரசு அமைதி காப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உணவு உண்ண மாட்டேன். மத்திய அரசு, குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு ஆறு மாதத்திற்குள் தண்டனை வழங்க வேண்டும், என கூறினார். #Unnaorapecase #Kathuarapecase #DCWchief #indefinitehungerstrike