உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, நேற்று முன்தினம் காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி கோர்ட்டுக்கு புறப்பட்டார்.
கோர்ட்டுக்கு செல்லும் வழியில், குற்றம்சாட்டப்பட்ட சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் சேர்ந்து, அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் அம்மாநில சட்டமன்றத்தின் பிரதான நுழைவாயிலின் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் இரண்டு பேரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.