புதுடெல்லி:
இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவுக்கு இன்று இரவு 10 மணியளவில் வருகை தந்தார்.
தூதரக அதிகாரிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மூன்று நாள் பயணமாக வரும் மைக், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் இறக்குமதி வரி விதிப்பு, பாதுகாப்பு, எச்1பி விசா போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாடுக்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஏற்கனவே ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இது குறித்து சவுதி அரேபியா மன்னருடன் மைக் பாம்பியோ பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.