செய்திகள்

பீகார்: மகன் திருமணத்தை எளிய முறையில் நடத்திய துணை முதல் மந்திரி

பீகார் மாநிலத்தின் துணை முதல் மந்திரியான சுஷில் குமார் மோடி, தனது மகன் திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தி அனைவரது பாராட்டை பெற்றார்.

மாலை மலர்

பாட்னா:

பீகார் மாநிலத்தின் துணை முதல் மந்திரியான சுஷில் குமார் மோடி, தனது மகன் திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தி அனைவரது பாராட்டை பெற்றார்.

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரான நிதிஷ் குமாரும், துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடியும் பதவி வகித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சுஷில் குமார் மோடியின் மகன் உத்காருக்கும், கோல்கொத்தாவை சேர்ந்த சார்ட்டரு அக்கவுண்டண்ட் யாமினிக்கும் நேற்று பீகார் கால்நடை மருத்துவ கல்லூரி மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியை மத்திய மந்திரி வழங்கினார்.

இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ராம் விலாஸ் பஸ்வான், தர்மேந்திர பிரதான், கிரிராஜ் சிங் கிஷோர், பீகார் கவர்னர் சத்யபால் மாலிக், கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ரகுபர்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவரான லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.

திருமணத்தின் சிறப்பு அம்சங்கள்:

திருமண ஜோடியினர் மிகவும் எளிமையான ஆடையை அணிந்திருந்தனர்.

மணமகள் எந்த அலங்கார ஆபரணங்களும் அணியவில்லை.

சத்தம் போடும் பாடும் பாட்டுக் கச்சேரி இல்லை.

திருமணத்துக்கு வருபவர்கள் கட்டாயம் பரிசு பொருள் கொண்டுவரக் கூடாது என்பது கண்டிப்பான உத்தரவு.

வரதட்சணை வாங்குவதை எதிர்த்து ஆங்காங்கே பேனர்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

கண்கள், உடல் உறுப்பு தானத்தின் சிறப்புகளை விளக்கி பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இப்படி, மகனது திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்திய சுஷில் குமார் மோடிக்கு அனைவரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.