புதுடெல்லி:
பாகிஸ்தானில் பாலகோட் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்ட நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விமானப்படையை நினைத்து பெருமைப்பட வேண்டும். அவர்கள் பாகிஸ்தானுக்குள் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தி இருக்கும்போது, அதில் சந்தேகம் எழுப்பி ஆதாரம் கேட்பது நமது படைகள் மீது நம்பிக்கை இல்லாததையே காட்டும்.
குறைந்தபட்ச கண்ணியமாவது வேண்டும். இந்த அளவுக்கு அரசியல் ஆக்கக்கூடாது.
பா.ஜனதா, நமது வீரர்களின் தியாகத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியது கிடையாது. எங்களைப் பொறுத்தவரை, அரசியலை விட தேச பாதுகாப்பு மேலானது.
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ராணுவம் விருப்பம் தெரிவித்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அனுமதி அளிக்கவில்லை. நாங்கள் இப்போது அனுமதி அளித்துள்ளோம்.
மேலும், அணுகுண்டு சோதனை நடத்த முந்தைய 4 பிரதமர்கள் அனுமதி அளிக்காதநிலையில், வாஜ்பாய்தான் அனுமதி அளித்தார்.