செய்திகள்

சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை - அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அமைச்சரவை

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #NarendraModi #UnionCabinet

சமீபத்தில் காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் கற்பழிப்பு, அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் மரணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எனவே, சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுமிகள் கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வக்கீல் ஆஜராகி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை உடனடியாக கூட்டினார். அதன்படி மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவத்தில் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ) தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது இந்த சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.