செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் பக்னோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி முற்றுகையிட்டனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.