செய்திகள்

வேலை கிடைக்காததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

டெல்லியில் வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த வாலிபர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Mancommitssuicide

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தின் போஜ்பூரி பகுதியைச் சேர்ந்தவர்  சவுரவ்(30). பீகாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வேலை தேடி பீகாரில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார்.

டெல்லியின் அசோக் நகர் பகுதியில் வீடு ஒன்று எடுத்து தங்கி கடந்த 2 மாதங்களாக வேலை தேடி வந்துள்ளார்.  எங்கும் வேலை கிடைக்காததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி நேற்று காலை மயூர் விகார் மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மையூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 9 மணி அளவில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சவுரவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சவுரவ் உயிரிழந்ததையடுத்து, அவர் தங்கியிருந்த அசோக் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அவரது டைரியை கைப்பற்றினர். அதில், வேலை கிடைக்காததால் கடும் விரக்தியில் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சவுரவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. #Mancommitssuicide

SCROLL FOR NEXT