விபத்தில் பலியான அம்ரிஸ்ராமச்சந்திரன் 
செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதல்: தாய்- மகன் பலி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி அருகே உள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்தவர் பாபு (வயது 52). இவரது மனைவி ராதா (45). இவர்களுக்கு அஜன் (28), அம்ரிஸ்ராமச்சந்திரன் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

பாபு சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக வேலைப்பார்த்து வந்தார். பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று அவர் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊரான திருச்சி நாச்சிக்குறிச்சிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பாபுவின் உடலை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சென்னையில் இருந்து கொண்டு சென்றனர்.

ஒரு காரில் ராதா, அம்ரிஸ்ராமச்சந்திரன் மற்றும் பாபுவின் தாய் தங்கம் (65), உறவினர் புவானியா (25) ஆகியோர் வந்தனர். இந்த காரை சென்னையை சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டி சென்றார்.

மற்றொரு காரில் அஜன் மற்றும் உறவினர்கள் சென்றனர். இந்த கார்கள் ஆம்புலன்சை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

இன்று காலை 6 மணிக்கு அவர்கள் சென்ற கார்கள் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரவுண்டானாவை கடந்து சென்றது.

லாரி மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் அம்ரிஸ் ராமச்சந்திரன் பிணமாக கிடக்கும் காட்சி.

இந்த விபத்தில் காரில் இருந்த ராதா, அவரது மகன் அம்ரிஸ் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் அந்த காரில் இருந்த தங்கம், புவானியா, கார் டிரைவர் கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்- இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், எடைக்கல் சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயம் அடைந்த 3 பேரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்த ராதா, அம்ரிஸ்ராமச்சந்திரன் ஆகியோரது உடல்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்தில் இறந்த அம்ரிஸ் ராமச்சந்திரன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.