உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அ.குறும்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் உளுந்தூர்பேட்டை துணை மின்நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சரண்யா (வயது 14). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சரண்யா கடந்த 4 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதியடைந்தார். அவரது பெற்றோர் சரண்யாவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாலை வீடு திரும்பிய சரண்யாவுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமாக இருந்ததால் உடனே சரண்யாவை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சரண்யா பரிதாபமாக இறந்தார். சரண்யாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.