உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.
பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் ஏற்கனவே 14 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. தற்போது மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. 202 பேர் மாயமாகியுள்ளனர்.
உடைந்த அணையை ஒட்டியுள்ள சுரங்கங்களில் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக்குழு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.