கொலை 
செய்திகள்

உடுமலையில் மின் அதிகாரி அடித்துக்கொலை

உடுமலையில் மின் அதிகாரி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை மேட்டுக்காடு பகுதியில் மின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்த மணிபிரபு (வயது 45) என்பவர் இளநிலை மின் பொறியாளராக இருந்தார்.

இதே அலுவலகத்தில் கொழுமத்தை சேர்ந்த கண்ணன் (40) என்பவர் வயர்மேனாக உள்ளார்.

இன்று காலை மின் அலுவலகத்தில் இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த வயர்மேன் கண்ணன் மின்பொறியாளர் மணிபிரபுவின் தலையில் ரீப்பர் கட்டையால் அடித்தார். இதில் மணிபிரபு படுகாயத்துடன் சரிந்து விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள் மணிபிரபுவை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் மின் ஊழியர் கண்ணனுக்கு பணிசுமை அதிகம் கொடுத்ததால் அவர் மணிபிரபுவை அடித்துக்கொன்றதாக தெரிகிறது என்று போலீசார் கூறினர். இருந்தாலும் தலைமறைவாக உள்ள கண்ணன் சிக்கினால் தான் முழு விபரம் தெரியவரும் என்று இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணன் கூறினர்.

பலியான மணிபிரபுவுக்கு சுபாஷினி என்ற மனைவியும், மதுவர்னிகா, தபுவைஷ்ணவி என்ற மகள்களும் உள்ளனர்.