சிறுமி ஸ்ரீனா 
செய்திகள்

பாட்டி திட்டியதால் 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற மாணவி

உடுமலை அருகே பாட்டி திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். அவளை பொதுமக்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அம்மாபட்டி பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் 13 வயது மதிக்க தக்க சிறுமி பள்ளி சீருடையுடன் அழுதபடி நின்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்லத்துரை மற்றும் பொதுமக்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் வீட்டை விட்டு வெளியேறி வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சிறுமியை குடிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அந்த சிறுமி தனது பெயர் ஸ்ரீனா (13)என்றும் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார். கரடி வாவி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார்.

தனது தாய்-தந்தை பிரிந்து இருவரும் வேறு திருமணம் செய்து கொண்டனர். தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும் அவன் திருச்சியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தாய் -தந்தை பிரிந்து சென்றதால் பாட்டி பராமரிப்பில் வசித்து வந்தேன். எனது பாட்டி பள்ளி புத்தகத்தை தீ வைத்து விடுவதாக கூறினார். மேலும் என்னை அடிக்கடி திட்டினார். வீட்டை விட்டு வெளியேறி விடு என கூறி வந்தார்.

இதனால் நான் பள்ளி முடிந்ததும் நடந்து இங்கு வந்து விட்டேன் என கூறினார்.

அவரை நேற்று இரவு உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்க வைத்தனர். சிறுமி கொடுத்த முகவரியை கொண்டு போலீசார் அவரது பாட்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பின்னர் பாட்டியிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது.

செலக்கரிச்சலில் இருந்து அம்மாபட்டி சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இவ்வளவு தூரத்தை மாணவி நடந்து வந்துள்ளார். #tamilnews