வெல்லிங்டன்:
U19 உலகக்கோப்பை நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பாகிஸ்தான் - தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தென்னாப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்திவ் பிரெட்ஸ்கீயும், ஜிவ்ஷன் பில்லேயும் களமிறங்கினர். மேத்திவ் 12 ரன்களினும், ஜிவ்ஷன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரெனார்ட் வான் டொண்டர் 4 ரன்களிலும், ஹெர்மான் ரோல்ப்ஸ் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்ரிக்கா அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய வெண்டில் மக்வேடு நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். ஆனால் எதிர்முனையில் வந்தவர்கள் பெரிதாக ரன் எடுக்க தவறினர். அரைசதம் கடந்த மக்வேடு 60 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜீன் டூ பிளஸ்சிஸ் 21 ரன்களும், ஜேசன் நிமாண்ட் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியில், தென்னாப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமத் மூசா 3 விக்கெட்களும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்களும், அர்சத் இக்பால், ஹசன் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமத் சையத் ஆலமும், ரொகைல் நசிரும் களமிறங்கினர். ஆலாம் 15 ரன்களிலும், நசிர் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அம்மாத் ஆலம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அலி சர்யாப் களமிறங்கினார். அவர் ஒரு முனையில் விக்கெட் கொடுக்காமல் விளையாட, எதிர்முனையில் வந்தவர்கள் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். சாத் கான் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலி சர்யாப் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்ரிக்கா அணி சார்பில் ஜேசன் நீமாண்ட் 2 விக்கெட்டும், ஜெரால்ட் கோட்சீ, அகோனா நியாகா, ஹெர்மான் ரோல்ப்ஸ், காடிஸ் மோல்பே, ஜேட் டி கிலெர்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அலி சர்யாப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #U19WorldCup #PAKU19vsRSAU19 #AliZaryab