ஆட்டோ டிரைவர் ஜெகநாதன் 
செய்திகள்

செல்போனில் படம் பிடித்ததால் ஆத்திரம் - 2 வாலிபர்கள் குத்திக்கொலை

திருச்சியில் செல்போனில் படம் பிடித்த ஆத்திரத்தில் 2 வாலிபர்களை ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). இ.பி. ரோடு அருகே உள்ள விறகுபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் (28). பெயிண்டர்களான இருவரும் நண்பர்கள்.

நேற்றிரவு 2 பேரும் தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்டாள் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெகநாதன் அந்த வழியாக வந்தார்.

அவர் செல்போனில் பிரகாஷ், ராஜ்குமாரை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் சேர்ந்து ஜெகநாதனிடம் எப்படி எங்களை செல்போனில் படம் பிடிக்கலாம் என்று தட்டிக்கேட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து ஜெகநாதனை சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை பறித்தனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோர் தன்னை தாக்கியதால் ஜெகநாதனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற ஜெகநாதன், ஆத்திரத்தில் திரும்பி வந்தார். அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோரை அவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

கொலை செய்யப்பட்ட பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோர் பிணமாக கிடந்த காட்சி

அதற்குள் அக்கம், பக்கத்தினர் படுகாயமடைந்து கிடந்த 2 பேரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோரை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.