தஞ்சாவூர்:
தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தை தஞ்சை மண்டல போக்குவரத்து துறை துணை ஆணையர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் திலகர்திடல் அருகே இருந்து தொடங்கி சோழன்சிலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை, அண்ணாசிலை, காந்திஜிசாலை, இர்வீன்பாலம் வழியாக ரெயில் நிலையத்தை அடைந்தது.
பேரணியில் தஞ்சை பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இருசக்கர பழுதுபார்ப்போர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.