செய்திகள்

இரு அணிகளும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்குவது பற்றி பேசலாம்: குணசேகரன் எம்.எல்.ஏ.

அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்குவது பற்றி பேசி முடிவு எடுக்கலாம் என திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.

மாலை மலர்

திருப்பூர் கே.ஜி.எஸ். பள்ளியில் கட்டப்பட்ட புதிய கலையரங்கு திறப்பு விழா இன்று நடந்தது. இதை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (எடப்பாடி அணி) திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைவில் தேர்தல் வரும். இதில் ஜெயித்து விடலாம் என்று ஓ.பி.எஸ். அணியினர் பகல் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. அவர்கள் இரவில் ஓய் வெடுக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தனி செல்வாக்கு யாருக்கும் கிடையாது. அ.தி.மு.க. என்ற கட்சிக்கு மட்டுமே செல்வாக்கு உள்ளது. இதை ஓ.பி.எஸ். அணியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுச்செயலாளர் சசிகலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். முதலில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இணைய வேண்டும்.

அதன்பிறகு இரு அணிகளும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்க முடிவு செய்யலாம். ஆனால் அதற்கு முன்பு நீக்க முடியாது. முதலில் ஓ.பி.எஸ். அணியினர் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக முடிவு எடுக்க வேண்டும். உடன் இருப்பவர்களின் பேச்சை கேட்க கூடாது.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.