கோப்பு படம் 
செய்திகள்

திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் மரணம்

திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள கண்ணனூரில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் உள்ளது. இன்று காலை கண்ணனூர் தெற்கு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 30) மற்றும் ரத்தினம், (55), சதீஷ் (30) ஆகியோர் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர்.

மது குடித்த சிறிது நேரத்தில் 3 பேருக்கும் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். மற்ற 2பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தினம் இறந்தார். சதீஷ் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் கண்ணனூர் டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.