பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் தாலுகாவிற்குட்பட்டது அத்திப்பட்டி. இங்குள்ள புதுமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ரெங்க பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மதன் குமார் (வயது23), நல்லதம்பி மகன் சங்கையா (27) ஆகியோரும் பங்கேற்றனர்.
திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் நாடகம் இடம் பெற்றது. அதனை மதன்குமாரும், சங்கையாவும் பார்த்தனர்.
இன்று அதிகாலை வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு இருந்த இருவரும் அதிகாலை 2 மணிக்கு இயற்கை உபாதைகளை கழிக்க ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்றனர்.
அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே அவர்கள் ஒதுங்கியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மதன்குமார், சங்கையா ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சாப்டூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில் திருவிழாவுக்கு வந்த 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.