செய்திகள்

மே.வங்காளம்: சட்டவிரோதமாக தேக்கு மரங்களை கடத்திய 2 ராணுவ வீரர்கள் கைது

மேற்குவங்காளம் மாநிலம் சிலிகுரி அருகே சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் கடத்தியதாக இரு ராணுவ வீரர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா:

மேற்குவங்காளம் மாநிலம் ஜபால்குரி மாவட்டத்தில் உள்ள மான்பூங் சோதனைச் சாவடி அருகே நேற்று வனத்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில் தேக்கு மர கட்டைகள் இருந்துள்ளன.

வாகனத்தில் ராணுவ உடையுடன் இருந்த இரு வீரர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் பிரஜிந்த் ஹன்ரா மற்றும் பிந்து பரித்ஹர் என தெரியவந்துள்ளது. இரு வீரர்களும் தற்போது விடுமுறையில் இருந்தாலும், சீருடையில் மரங்களை கடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். கடத்தலில் பயன்படுத்தப்பட்ட வாகனமும் மரக்கட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது.