இருதரப்பினர் மோதல் 
செய்திகள்

முதலியார்பேட்டையில் இருதரப்பினர் மோதல்- 3 பேர் ஊருக்குள் நுழைய தடை

நையினார் மண்டபத்தை சேர்ந்த 3 பேர் ஊருக்குள் நுழைய தடைவிதிக்குமாறு முதலியார்பேட்டை போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக பாஸ்கர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கும் வக்கீல் சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் கற்களால் மாறிமாறி தாக்கி கொண்டனர்.

இந்த மோதல் தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மோதல் காரணமாக முதலியார்பேட்டையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அப்பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் இருதரப்பினரும் மோதிக்கொள்ளலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தடுத்திடும் வகையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட காரணமாக கருதப்படும் இருதரப்பை சேர்ந்த நையினார் மண்டபம் பாரதிவீதியை சேர்ந்த அருண்குமார்(வயது28) மற்றும் மணவாளன்(32), அறிவழகன் ஆகிய 3 பேரையும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்குமாறு முதலியார்பேட்டை போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.